தமிழுக்கு தடா!
இந்நிலை இப்படியே தொடருமாயின், அவர்கள் நினைத்திருக்கும் இளிச்சவாயர் நிலையை உறுதிப்படுத்த நாம் தயாராகிவிட்டோம் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
சிதம்பரத்தில் ஓர் இந்துக்கோவிலில் தமிழில் தேவாரம் பாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி அறிந்தேன்.
இது வேறு ஏதாவது தனிப்பட்ட நபர்கள் சார்ந்த பிரச்சனை எனில் வேறு விடயம். ஆனால் உண்மையிலேயே அக்கோவிலில் யாருமே தமிழில் பாட தடை எனில் இது பாரதூரமான விடயமே.
இப்படியே ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட சொத்து என தமது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தமது விருப்பத்திற்கோ அல்லது வெளிநாட்டு புல்லுருவிகளின் விருப்பத்திற்கோ, ஒவ்வோரு மொழிகளைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டால், அதுவும் அங்கே எம் தாய்த் தமிழிற்கே தடை விதிக்கும் ஒரு நிலையை உருவாக்கி விட்டால், தமிழ் நாடு தமிழுக்கு தாய்வீடு என்ற நிலையை எப்படிக் கட்டிக் காக்க முடியும்.
பிரான்சிலே ஒரு பிரதேசத்தில் இப்படி ஒரு பொதுமக்கள் பயன்பாட்டு நிலையத்தை உருவாக்கி அங்கே "பிரஞ்" க்கு தடை விதிக்க முடியுமா? அல்லது அப்படியே ஜேர்மனியில் "டொச்" இற்கு தடை விதிக்க முடியுமா?
நடிகர் சத்தியராஜ் ஒரு படத்தில் சொன்னது போல தமிழ்நாட்டில் தான் இளிச்சவாயர்கள் அதிகரித்து விட்டார்கள் என்பதை நிரூபிப்பது போல் அல்லவா இருக்கிறது இச்சம்பவம்.
அதுவும் தமிழறிஞர் கலைஞர் கருனாநிதி ஆட்சிக்காலத்தில்!
நிலைமை இப்படியே போனால், விரைவில் தமிழுக்கு பட்டையோ, நாமமோ நிச்சயம்.